நிம்மதியா தூங்க விடமாட்டேங்கிறாங்க! டைரக்டர் சித்திக் புலம்பல்!!
பாடிகார்ட் படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து நிம்மதியாக தூங்க விடாமல் தொல்லைபடுத்துகிறார்கள், என்று டைரக்டர் சித்திக் கூறியுள்ளார். கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் பிரண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது. இதையடுத்து மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனதால், தன்னை தினமும் பல நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து தூங்கவிடாமல் தொல்லை படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி சித்திக் அளித்துள்ள பேட்டியில், படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு கம்பெனிக்கே சென்று விடும். இதை புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது. மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன், என்று கூறியுள்ளார்.


0 comments